இன்று மாலை பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் இசட் பிளஸ் பாதுகாப்பு

0
36

இன்று மாலை பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு

தமிழக முதலமைச்சாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அவருக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக கடந்த மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்து தேவைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதங்களை எழுதி வந்தார். அத்துடன், செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.

‘நீட்’ தேர்வு, ஹைட்ரோ கார்பன், 7 பேர் விடுதலை ஆகியவை விவகாரங்கள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. மேலும், தற்போது தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கித்தொகை தேவைப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கவுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம்,காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார். பின்னர் டெல்லியில் உள்ள திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்புகிறார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் கொடுக்கவுள்ளார். அதில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிக்கவுள்ளார். இன்று இரவு டெல்லியில் அவர் தங்குகிறார். அதனைத்தொடர்ந்து நாளை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசுகிறார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார். தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட சில அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். திமுக எம்.பி.க்களும் டெல்லியில் உள்ளனர்.

முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் டெல்லிக்கு முதல் முறையாக செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சில அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.