இந்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறாது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

0
40

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

ரூ 1.11 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்களுக்கான 6 பணி நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

போலியோ இல்லாத இந்தியாவிற்காக போலியோ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. போலியோ பாதிப்பே இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது. 11 ஆண்டுகளாக இந்தியாவில் எங்கேயும் போலியோ கண்டறியப்படவில்லை.

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து போட வேண்டிய குழந்தைகள் எண்ணிக்கை 57 லட்சத்து 61 ஆயிரம் ஆகும். 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 696 இடங்களில் நடமாடும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பல்ஸ் போலியோ முகாமை 27-ந்தேதி காலை 8 மணிக்கு தேனாம்பேட்டையில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

12 வயது முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 12, 15 வயதுக்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். சிறார்களுக்கான 3,89,000 தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு மிக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அனுமதிக்கின்ற நாளில் இருந்து தடுப்பூசி போடப்பட உள்ளது. பல்ஸ் போலியோ முகாமினால் இந்த வாரம் நடத்தப்படவேண்டிய 23 ஆவது மெகா தடுப்பூசி முகாம் அடுத்தவாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகின்றது.

அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அங்கு படிக்கும் மருத்துவ மாணவர்கள் உதவி தேவை என யாரும் அணுகவில்லை. தூதரகங்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.