‘முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆனது!’ : ஆணையை வழங்கி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி!

0
127

‘முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆனது!’ : ஆணையை வழங்கி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான க. ராஜாத்தி அம்மாள் அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினை 22.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) மு.பெ. சாமிநாதன் இல்லம் சென்று வழங்கினார்.

அதன் பிறகு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (22.12.2024) செய்தியாளர்களை சந்தித்து அளித்த போது, “முத்தமிழறிஞர் கலைஞருடைய நூல்கள் நாட்டுமையாக்குவதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து அதற்கான அரசாணை வெளியிட்டார்.

அந்த வகையில் அவருடைய அனுமதியோடு, அவரின் உத்தரவின் அடிப்படையில் இன்றைக்கு அந்த அரசாணையை நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய துணைவியார் ராஜாத்தி அம்மாள் அவர்களிடத்தில் அரசின் சார்பில் ஒப்படைத்தோம்.

முத்தமிழறிஞர், ஏறத்தாழ பல்வேறு படைப்புகளை தந்தவர். இன்னும் சொல்லப்போனால், பள்ளிப்பருவத்தில் தான் எழுதத் துவங்கி “மாணவன் நேசன்” என்கின்ற பத்திரிகை கையேடை துவங்கி அதிலிருந்து முரசொலியில் உடன்பிறப்பிற்கான பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதி இடையில் குரளோவியம், நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் போன்ற படைப்புகளை தந்தவர். திரையுலகிலும் முத்திரை பதித்தவர்.

அதேபோல, 5 முறை இந்த நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 70 ஆண்டு காலம் பணியாற்றியவர். அப்படிப்பட்ட மகத்தான தலைவருடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டு, இதுவரை 179 படைப்பாளர்களுடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டிருக்கிறது.

அதற்கெல்லாம், அரசின் சார்பில், நிதி வழங்கப்பட்டிருந்தாலும் பாரதியாரை தவிர, இன்றைக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் குடும்பத்தார்கள் அதற்கு எதுவும் தொகை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கட்டணம் இல்லாமல், இன்றைக்கு நிதி இல்லாமல் அந்த படைப்புகள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அந்த வகையில் அதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர் அவர்களுடைய குடும்பத்தார் அனைவருக்கும், மரியாதைக்குரிய அம்மா தயாளு அம்மாள் அவர்கள் குடும்பத்தாருக்கும், அதேபோல, அம்மையார் ராஜாத்தி அம்மாள் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியை தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மற்றும் எழுத்தாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.