பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: உருவப் படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை: மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும்,அவர் தனது எக்ஸ் தளத்தில், “கழகத்துக்கும் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர். “தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்” என இனமான வகுப்பெடுத்து – கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
அன்பழகன்: 1922 ஆம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி அன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார்-சுவர்ணம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார் அன்பழகன்.அவரது இயற்பெயர் ராமையா . பின்னாளில் தமிழ் மீது கொண்ட பற்றால் தன் பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார். ”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுகளில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்பட்டார்.