பெரியாரியக் கருத்துகளை பரப்பி அறிவுப் பணியைத் தொடர்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0
85

பெரியாரியக் கருத்துகளை பரப்பி அறிவுப் பணியைத் தொடர்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு நாள் இன்று (டிசம்பர் 24) மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்ட பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து பெரியார் திடலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்தை திறந்து வைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரியார் கைத்தடி மாதிரியை திராவிட கழக தலைவர் கி.வீரமணி நினைவு பரிசாக வழங்கினார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது x சமூக வலைதளப் பக்கத்தில், “ஈராயிரமாண்டு இழிவுகளைக் கொளுத்தி – திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை – இனத்தை என்றும் காக்கும்!

அந்தக் கைத்தடியை எனக்குப் பரிசாக அளித்து நெகிழச் செய்துவிட்டார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

பெரியாரியப் பெருந்தொண்டுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட ஆசிரியர் அவர்கள், பகுத்தறிவுச் சுடரை ஏந்திப் புத்தொளிப் பாய்ச்சும் பணியில் நாளும் ஈடுபட்டு வருகிறார்.

1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விடுதலை ஏட்டின் பிரதிகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களைத் தாங்கி திராவிட இயக்க அறிவுக் களஞ்சியமாக உருவாகியுள்ளது, http://periyardigitallibrary.in

பெரியாரியக் கருத்துகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் அறிவுப் பணியைத் தொடர்வோம்! எங்கும் பகுத்தறிவுத் தீ பரவட்டும்!” என பதிவிட்டுள்ளார்.