சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
சென்னையில் 2022-ம் ஆண்டில் முதல்முறையாக கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி நடைபெற்றது. இதனை 44 ஆயிரத்து 888 பேர் பார்வையிட்டனர். 2023 ஆம் ஆண்டில் செம்மொழி பூங்காவில் 2வது முறையாக நடைபெற்ற மலர் கண்காட்சியை 23 ஆயிரத்து 302 பேர் பார்வையிட்டனர். பின்னர் 2024ம் ஆண்டில் 3வது முறையாக பிப்ரவரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற மலர் கண்காட்சியை 1 லட்சத்து 9 ஆயிரத்து 27 பேர் பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த நிலையில் ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.பல்வேறு வகையான செடி கொடிகள், பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள யானை, மயில், முதலை, ஆமை போன்ற உருவங்கள், வண்ணமயமான சோலைகள், பூத்துக்குலுங்கும் அழகிய அரிய வகை பூக்கள் ஆகியவை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி, டயாந்தஸ், சினியா, டொரினியா, கேலண்டுலா, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பான்ஸி, டெல்ஃபினியம், பால்சம், ஹைட்ராஞ்சியா, போன்ற 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகள் இங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி வரும் ஜனவரி 11 -ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிற நிலையில் மலர் கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டை இணைய தளத்தின் வாயிலாகவும் அல்லது செம்மொழி பூங்காவில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம் என ஊழியர்கள் தெரிவிக்கின்றன. அனைத்து அடிப்படை வசதிகளோடு மிகச் சிறந்த ஏற்பாடுகளை செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.