விஷமக்காரன் விமர்சனம்: விஷமக்காரன் தடுமாறும் நேரத்தில் மனங்களை வசியம் செய்யும் விசித்திரமானவன் | ரேட்டிங் – 3/5

0
183

விஷமக்காரன் விமர்சனம்: விஷமக்காரன் தடுமாறும் நேரத்தில் மனங்களை வசியம் செய்யும் விசித்திரமானவன் | ரேட்டிங் – 3/5

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் வி (விஜய் குப்புசாமி).இந்தப் படத்தில் அனிகா விக்ரமன் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ஜெ. கல்யாண்,இசை : கவின்-ஆதித்யா, படத்தொகுப்பு : எஸ்.மணிக்குமரன், மக்கள் தொடர்பு : கே.எஸ்.கே. செல்வா.

வாழ்க்கையை கையாளும் முறையை சொல்லிக் கொடுக்கும் பயற்சியாளர் அக்னி. இவரை ஆலோசனைக்காக ஐகிரி சந்திக்க நேரிட, அவரின் அழகில் மயங்கி பேசிப்பேசியே காதலில் விழச்செய்து திருமணமும் செய்து கொள்கிறார் அக்னி. ஐகிரியிடம் தன் முன்னாள் காதலி தரங்கிணி பற்றியும் உயிருக்கு உயிராக காதலித்து, பிரிந்த சோதகத்தையும் சொல்கிறார். ஐகிரி ஆறுதல் கூறி அக்னிக்கு உறுதுணையாக இருக்கிறார். இதனிடையே ஒட்டலில் இருவரும் தரங்கிணியை பார்க்க நேரிடுகிறது. மன உளைச்சலில் இருக்கும் தரங்கிணியை வீட்டிற்கு அழைத்து வந்து அக்னி ஆலோசனை வழங்கி உதவி செய்கிறார். மீண்டும் துளிர் விடும் இருவரின் நட்பு ஐகிரிக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது.  இதனால் இவர்களுக்கு தெரியாமல் காமிரா வைத்து கண்காணிக்கிறார். இவர்கள் நண்பர்களாகவே பழகுவதை பார்த்து, எண்ணத்தை மாற்றிக்கொண்டாலும், கண்காணிப்பதைப் மட்டும் விட்டு விடாமல் இருக்கிறார். ஒரு நாள் சிறு சண்டை ஏற்பட, வீட்டை விட்டுச் செல்லும் ஐகிரியால் அக்னிக்கும், தரங்கிணிக்கும் உறவு ஏற்பட்டு விடுகிறது. இதை காமிராவில் பார்க்கும் ஐகிரி என்ற செய்தார்? அக்னியிடம் சண்டை போட்டாரா? அக்னி ஐகிரியின் சந்தேக புத்தியை கண்டுபிடித்தாரா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

அறிமுக நடிகராக களமிறங்கியிருக்கும் வி பயிற்சியாளருக்கு உண்டான அணுகுமுறை, பேச்சுத்திறன் என்று இயல்பாக நடித்துள்ளார்.இவருடன் இரண்டு கதாநாயகிகள் அனிகா விக்ரமன், சைத்ரா ரெட்டி படம் முழுவதும் தங்களுடைய அழகாலும், நடிப்பு திறமையாலும் கவனிக்க வைத்துள்ளனர்.

ஒளிப்பதிவு : ஜெ. கல்யாண், இசை : கவின்-ஆதித்யா ஆகியோர் படத்திற்கேற்ற முக்கியத்துவத்தை உணர்ந்து முடிந்த வரை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.
எஸ்.மணிக்குமரன் படத்தொகுப்பு சில இடங்களில் ஏற்படும் தோய்வை கத்திரி போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஒருவரின் மனதை புரிந்து கொண்டு அவர்களின் எண்ணங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து சாதித்துக் கொள்வதை கதைக்களமாக வைத்து இயக்கியிருக்கிறார் வி. ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட புது கோணத்தில் இந்தப் படத்தை எடுத்து, அதில் காதல், நட்பு, பிரிவு, சூழ்ச்சி கலந்து சுவாரஸ்யமாக கொடுக்க முயன்றுள்ளார் இயக்குனர் வி. இடைவேளை வரை ஆங்கிலம், தமிழ் கலந்த உரையாடலுடன் படத்தை நகர்த்தியிருந்தாலும், இறுதிக் காட்சியில் விறுவிறுப்பை கலந்து சிறப்பாக முடித்துள்ளார் இயக்குனர் வி.

மொத்தத்தில் ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் தடுமாறும் நேரத்தில் மனங்களை வசியம் செய்யும் விசித்திரமானவன்.