படவா சினிமா விமர்சனம் : படவா – கருவேல மரத்தின் நச்சுத்தன்மை மற்றும் விவசாயம் பற்றிய ஒரு முக்கியமான மெசேஜை வெளிப்படுத்தும் படம் | ரேட்டிங்: 3/5
கே வி நந்தாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் விமல், சூரி, ஸ்ரீதா, கே ஜி எஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், விநோதினி வைத்யநாதன் மற்றும் பலர் நடித்துள்ள படம் படவா.
ஒளிப்பதிவு – ராமலிங்கம்.
இசை – ஜான் பீட்டர்.
படத்தொகுப்பு – வினோத் கண்ணா
பாடல்கள் – விவேகா, கபிலன் வைரமுத்து, இளைய கம்பன், சொர்ணலதா, ஜான் பீட்டர்
தயாரிப்பு : ஜே ஸ்டுடியோ இன்டர்நேஷனல் – எம்.ஜான் பீட்டர்
மக்கள் தொடர்பு நிகில் முருகன்.
சிவகங்கை மாவட்டம் மரக்காத்தூர் கிராமத்தை சேர்ந்த வேலன் (விமல்) மலேசியாவில் பார் ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கிறார். ஆட்கள் குறைப்பு காரணமாக வேலையை இழக்கிறார். சொந்த ஊர் திரும்பினால் ஊர் மக்கள் ஒன்றுகூடி என்ன செய்வார்கள் என்ற பயத்தில் புலம்பும் போது, அவரது நண்பர்கள் என்ன காரணம் என கேட்க தான் எப்படி மலேசியா வந்த கதையை சொல்ல ஆரம்பிக்கிறார் வேலன்.
வேலன் வேலைக்கு செல்லாமல் நெருங்கிய நண்பர் உரப்புடன் (சூரி) சேர்ந்து ஊர் சுற்றி பொழுதைக் கழிக்கிறார். மரக்காத்தூரில் பருவமழை இல்லை, மேலும் ஊர் முழுக்க எங்கு பார்த்தாலும் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் கிராமமே வறண்ட பூமியாக மாறிவிட்டது. செங்கல் சூளை நடத்தி வரும் கே ஜி எஃப் ராம், கருவேலமரம் தனக்கான முதலீடு என்று அதை தெய்வமாக வணங்கியும் வருகிறார். அன்றாட வாழ்வாதாரத்திற்காக அக்கிராமத்தில் அவரது செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்கின்றனர். செங்கல் சூளைக்கு விறகுகள் அதிக அளவில் தேவைப்படுவதால் வேலன் மற்றும் உரப்பு உதவியுடன் அக்கிராமத்தைச் சுற்றிலும் கருவேல விதைகளை தூவி கிராமத்தையே பொட்டல் காடாக மாற்றுகிறார். இந்நிலையில் வேலன் மற்றும் உரப்பு கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கில்லி, கோலி குண்டு, பம்பரம் விளையாடச் சொல்லித் தருவது, சொந்த அக்காவிடம் திருடி, மாமாவிடம் விற்று மாமனையும் ஏமாற்றி பணம் பறிப்பது, ஊர் தூங்கும் போது பட்டாசு வெடித்து தொல்லை கொடுப்பது, டாஸ்மாக் செலவுக்கு சுடுகாட்டுக் கூரையை திருடுவது என மது போதையில், ஊர்க்காரர்களுக்கு எப்படி எல்லாம் டார்ச்சர் கொடுக்க முடியுமோ அவ்வளவு டார்ச்சர் கொடுக்கிறார்கள். இருவரின் டார்ச்சர் தாங்காமல் ஊர் மக்கள் ஒன்று கூடி மொய் வசூலித்து, வேலனை மட்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர் இல்லாமல் ஊர் நிம்மதியாக இருக்கும் போது, திடீரென்று வந்து இறங்குகிறார் வேலன். ஊர் மக்கள் என்ன செய்வார்கள் என்ற பயத்தில் ஊர் திரும்பும் வேலனை கிராம மக்கள் அவருக்கு ராஜ மரியாதையுடன் வரவேற்கிறது. நெருங்கிய நண்பன் உரப்புடன் சேர்ந்து கிராம மக்கள் வேலனை சிறப்பாக வரவேற்று கொண்டாட காரணம் என்ன? ஊர் திரும்பிய அவர், மீண்டும் பழைய வேலனாகவே இருந்தாரா? போன்ற கேள்விகளுக்கு மீதிக்கதை பதில் அளிக்கும்.
காதல், கோபம், உணர்ச்சி, நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் ஆகியவற்றை இணைத்து, சிறந்த உடல் மொழி மற்றும் வசனம் மூலம் வேலன் கதாபாத்திரத்தை விமல் ஒரு அற்புதமான நடிப்பில் சித்தரித்துள்ளார்.
உரப்பு கதாபாத்திரத்தில்;, விமலுக்கு இணையாக சூரி, தனது தனித்துவமான பாணியில் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்து அளித்துள்ளார்.
செங்கல் சூளை உரிமையாளராக வரும் ராமச்சந்திர ராஜு வில்லத்தனத்தை கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளார்.
கதாநாயகி ஸ்ரீரிட்டா ராவ் கால்நடை மருத்துவராக வந்து கொடுத்த வேலையை செய்துள்ளார்.
தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி வைத்தியநாதன், ராமர் உட்பட அனைவரும் நேர்த்தியான நடிப்பு வழங்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் ஜான் பீட்டர் இசை மற்றும் பின்னணி இசை, வினோத் கண்ணாவின் படத்தொகுப்பு, ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, கணேஷின் ஆக்ஷன் ஆகியோர் தொழில்நுட்ப ரீதியாக கதைக்குத் துணை புரிந்திருக்கிறார்கள்.
கருவேல மரங்கள் மண்ணை மாசுபடுத்தும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டவை, அவை விவசாய நிலங்களை பாதிக்கின்றன, விவசாயத்தை சாத்தியமற்றதாக்குகின்றன, மேலும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கதையின் முக்கிய கருப்பொருளாகக் கொண்டுள்ளன என்ற கருத்தை இயக்குனர் கே.வி. நந்தா அழகாகப் பதிவு செய்துள்ளார். நகைச்சுவையுடன் மக்களுக்கு செய்தியை எடுத்துச் செல்லும் வகையில், திரைக்கதையில் நகைச்சுவை, காதல் ஆகியவற்றை இணைத்துள்ளார்.
மொத்தத்தில், ஜே ஸ்டுடியோ இன்டர்நேஷனல் சார்பாக எம். ஜான் பீட்டர் தயாரித்த படவா – கருவேல மரத்தின் நச்சுத்தன்மை மற்றும் விவசாயம் பற்றிய ஒரு முக்கியமான மெசேஜை வெளிப்படுத்தும் படம்.