பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்!

0
2

பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான 54 வயதான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.

கொரோனாவோ வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே காரை ஓட்டிக்கொண்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆனால், அவரது உயிரை யாராலும் காப்பாற்றமுடியவில்லை. இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.வி.ஆனந்த், தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இதுதவிர, காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், மற்றொரு திரை ஆளுமையும் மறைந்தது தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில்,

”வருந்துகிறேன் நண்பா!

திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்?

விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்!

ஒளியாய் வாழ்வாய் இனி நீ.”

இவ்வாறு வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.