பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட ’இரண்டாம் குத்து’ பட இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்

0
78

பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட ’இரண்டாம் குத்து’ பட இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’. அதன் 2-ம் பாகமாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார் . இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை இணையத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாரதிராஜா, கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம் என கேள்வி எழுப்பினார்.

தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராமல் பல கலைஞர்கள் கட்டமைத்த கூடு இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கப்படுவதாக தெரிவித்தார். இதற்கு பதலளிக்கும் விதமாக பாரதிராஜாவின் இயக்கத்தில் 1981-ஆம் ஆண்டு வெளிவந்த டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை பதிவிட்டு, இது கண்களை கூசாதா என ஜெயக்குமார் ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில், சந்தோஷ் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டாம் குத்து படத்தை இயக்கி நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீஸருக்கு இயக்குநர் பாரதிராஜா அவர்கல் எதிர்ப்பு தெரிவித்து ஆறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கனத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது.

ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கின்றேன். தமிழ்த்திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள், அவருடைய சாதனைகளில் 1 சதவிகிதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு பாரதிராஜா அவர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார். அவரது அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக் கூடாது.