நான் கண்டிப்பாக முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன்… ‘ஆர்ஆர்ஆர்’ முன் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன்!

0
90

நான் கண்டிப்பாக முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன்… ‘ஆர்ஆர்ஆர்’ முன் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன்!

ராஜமெளலி இயக்கி உள்ள படம் (RRR) ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. லைகா ப்ரொடக்ஷன்ஸ், டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜனவரி 7-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. புஷ்பா படத்திற்கு பிறகு மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சி இது தான். மிக பிரம்மாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 27 ம் தேதியும், ஐதராபாத்தில் ஜனவரி 30 ம் தேதியும் நடத்தப்பட உள்ளதாக லைகா அறிவித்திருந்தது. ஆனால் ஒமைக்ரைன் பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஐதராபாத்தில் நடத்தப்பட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை வர்த்தக மையத்தில் ஆர்ஆர்ஆர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் சென்னையிலும் மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் ராஜமெளலி, ராம்சரண், ஜுனியர் என்டிஆர், உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, மதன் கார்க்கி, ஆர்.பி.செளத்ரி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஆடல், பாடலுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது குழுவினருடன் சேர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட நாட்டு நாட்டு பாடலுக்கு அதே போல் உடையணிந்து, அதே ஸ்டெப்களை போட்டு நடனமாடி அனைவரையும் அசர வைத்தார். இதனை ராஜமெளலி உள்ளிட்டோர் மிகவும் ரசித்தனர்.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-

நான் ராஜமெளலி சாரோட மிகப் பெரிய ஃபேன், மகாதீரா படம் பார்த்ததில் இருந்து. அதற்கு பிறகு நான் இ படம் வந்த போது தான் நான் சினிமா உலகிற்குள் வந்தேன். அந்த படம் பார்த்த போது ஒரு ஈயை வைத்து இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியுமா என பயங்கர ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஒரு ஈயை வைத்தே படம் எடுக்கிறார்கள் என்றால், நம்மை வைத்து கண்டிப்பாக இங்கு படம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இன்னொரு பக்கம் அது பயம்.

அதே சமயம் ஈயை வைத்து எடுத்தாலே நன்றாக இருக்கு, எதற்காக இவர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்து விடுவார்களோ என்ற பயம். அதுக்கு பிறகு அவரின் ஒவ்வொரு படங்களையும் ரசிக்க ஆரம்பித்தேன். எல்லோருக்கும் அவரின் பணி பிடிக்கும். என்னை மிகவும் கவர்ந்தது, இவ்வளவு பெரிய படங்களை, சாதனைகளை செய்து விட்டு அமைதியாக இருப்பது மிகவும் கஷ்டம். அதை தவம் போல செய்கிறார்கள் என நினைக்கிறேன்.

இங்கு நமக்கெல்லாம் ஒரு படம் ஓடிட்டாலே, ஹிட் கொடுத்துட்டோம்ல என நினைக்கும் போது, உலகம் முழுவதும் ஒரு படத்தை பார்க்க வைத்து விட்டு, அடுத்து என்ன பெரிசா பண்ணலாம்ன்னு யோசிக்கிறது ரொம்ப ஊக்குவிப்பதாக உள்ளது. சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நம்ம கனவை தாண்டியும் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் மிகப் பெரிய இன்ஸ்ப்ரேஷன். உங்களை பார்க்க வேண்டும் என்று தான் ஆவலாக இருந்தேன். இன்று பார்த்து விட்டேன்.

இரண்டு சிங்கங்கள் என்றும் சொல்லலாம், இரண்டு புலிகள் என்றும் சொல்லலாம். இவர்களை தூரத்தில் இருந்து பெரிய திரையில் தான் பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் கடந்த முறை விருது விழாவிற்கு வந்த போது, என்னுடைய படத்தை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்ப்பார்கள் என கூறியது, இன்னும் நிறைய முயற்சி போட வேண்டும் என தோன்றியது. அவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து வந்து இவ்வளவு எளிமையாக உள்ளீர்கள்.

இது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைக்கும் படமாக இருக்க போகிறது. ஆர்ஆர்ஆர் படம் இந்திய சினிமாவின் பெருமையாக உள்ளது. இந்த படம் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். டிரைலரே மிரட்டலாக ஒரு படத்தை பார்ப்பது போல் ஷாட் ஷாட்டாக பார்க்க வைக்கிறது. இன்னும் படம் எப்படி இருக்குமோ என பார்க்க மிக ஆர்வமாக உள்ளேன்.

நான் கண்டிப்பாக முதல் நாள் முதல் ஷோ பார்க்க போறேன். நீங்களும் அனைவரும் கண்டிப்பாக தியேட்டரில் போய் பாருங்கள். கொரோனாவால் சினிமா உலகமும் தியேட்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 2022 ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இந்த படம் வந்து மிகப் பெரிய வசூலை கொடுக்க போகிறது. அதைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை வரப் போகிறது. இந்த படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வந்தால் அதற்கு பிறகு வரும் எங்களின் படங்களும் ஓடும் என்றார்.

***ஆர் ஆர் ஆர் புரோமொசன் நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா மற்றும் விஜய் அனைவருக்கும்  நன்றி தெரிவிச்சாங்க. அப்போது ட்ரம்ஸ் வாசித்தவரின் பெயரை சொல்ல மறந்துட்டாங்க.

இதை கவனித்த சிவகார்த்திகேயன், மேடைக்கு கீழே இருந்த படி சைகையிலேயே ட்ரம்ஸ் வாசிப்பவரின் பெயரை சொல்லும்படி கூறினார். சிவகார்த்திகேயனின் இந்த நல்ல மனசை சோஷியல் மீடியாவில் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.