தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ் வெற்றி

0
257

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ் வெற்றி

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக கே.பாக்யராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக கே.பாக்யராஜ் பதவி வகித்தார். அந்த சமயத்தில் சர்கார், கோமாளி உள்ளிட்ட பல படங்களின் கதை தொடர்பான பிரச்சினைகளில் அவர் திறம்பட செயல்பட்டார் என பலரும் பாராட்டினர்.

குறிப்பாக சர்கார் திரைப்பட கதை சர்ச்சையில் உதவி இயக்குனர் பக்கம் நின்றார் கே.பாக்யராஜ். அந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வரை சென்று உதவி இயக்குனருக்கு உறுதுணையாக இருந்தார். இந்த நிலையில் கே.பாக்யராஜின் செயல்பாடுகள் குறித்து சங்கத்தில் சர்ச்சைகள் வெடித்தன.

அதே சமயம் கே.பாக்யராஜ் பதவியில் இருந்து விலகுவதாக கூறினார். ஆனால் அவருடன் பதவி வகித்தவர்கள் கே.பாக்யராஜ் தலைவராக தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் காரணமாக தன்னுடைய முடிவை திரும்ப பெற்றார்.

இதையடுத்து சமீபத்தில் மீண்டும் எழுத்தாளர்கள் சங்கத்தில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. அதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

பாக்யராஜ் அணியில் துணைத் தலைவராக ஜி.கண்ணன், காரைக்குடி நாராயணன் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு லியாகத் அலிகான், பொருளாளர் பதவிக்கு பாலசேகரன் ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், ரத்னகுமார் ஆகியோரும் போட்டியிட்டனர் செயற்குழு உறுப்பினர்களாக, பாபுகணேஷ், அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், ஹேமமாலினி, ஜெயப்பிரகாஷ், பட்டுகோட்டை பிரபாகர், ராஜா, ராஜா கார்த்திக், ராஜேஷ்வர், சேகர், வேல்முருகன், பா.விஜய் ஆகியோர் போட்டியிட்டனர்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான வசந்தம் எழுத்தாளர்கள் அணியில், துணைத் தலைவராக மனோபாலா, ரவிமரியா போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு மனோஜ்குமார், பொருளாளர் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு மதுரை தங்கம், பிரபாகர், ரங்கநாதன், சண்முகசுந்தரம் ஆகியோரும் போட்டியிட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக, யுரேகா, பேரரசு, பொன்ராம், ராதாரவி, சாய்ரமணி, சாந்தகுமார், சரண், ஷரவணன் சுப்பையா, சினேகன், சிங்கம்புலி, ஏ,வெங்கடேஷ், விவேகா ஆகியோர் போட்டியிட்டனர்.

அதில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ் தேர்வாகியுள்ளார். அவர் 192 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளும் பெற்றனர்.

இதன் காரணமாக 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.