தமிழ், பான் இந்தியா படங்களுக்கு முக்கியத்துவம்.. தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணி அதிரடி!
இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் திரு. ஆதித்யாராம் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘கேம் சேஞ்சர்’ படத்தைத் தொடர்ந்து அதிக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பான் இந்தியா திரைப்படங்களை இணைந்து தயாரிக்க உள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டணி முதல் முறையாக ‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் கலந்து கொண்டனர்.
முதற்கட்டமாக லக்னோவில் வைத்து நவம்பர் 9 ஆம் தேதி திரைப்படத்தின் டீசரை வெளியிடுகிறோம். அதன்பிறகு அமெரிக்கா மற்றும் சென்னையில் வைத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி மாத முதல் வாரத்தில் தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
“எல்லா இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறக்கூடிய அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன. எப்போதுமே ஷங்கர் படங்கள் விசேஷமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். விசேஷ தீம் மட்டுமின்றி இந்தப் படத்தில் ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்களும் உள்ளன. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் படம் இது. கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்,” என்று கூறினார்.
ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யாராம் பேசும் போது, “ஊடகம் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்களை நான் சந்தித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் முதல் முறையாக சந்திக்கிறேன். ‘நாம் பேசக் கூடாது, நமது வேலை தான் பேச வேண்டும்’ என்பதை நம்புவதால், நான் பொதுவாக யூடியூப் அல்லது வீடியோ நேர்காணல்கள் கொடுப்பதில்லை. எனினும், சூழ்நிலைகள் மாறிவிட்டதாலும், தில் ராஜூ சார் கொடுத்த ஊக்கம் காரணமாகவும், இந்த மேடையில் உங்களுடன் நான் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன். ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.”