தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது விஷால் காவல் துணை ஆணையரிடம் புகார்

0
20

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது விஷால் காவல் துணை ஆணையரிடம் புகார்

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார். இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அக்கடனை கடந்த பிப்ரவரி மாதமே முறைப்படி அளித்துவிட்டார்.

கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.செளத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை. அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள்.

விஷால் சார்பில் அவருடைய மேனஜர் ஹரிகிருஷ்ணன், புகார் மனுவை காவல் துறையிடம் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.பி.சவுத்திரி விளக்கம்

நடிகர் விஷால் கொடுத்துள்ள புகார் மனு பற்றி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் விஷாலுக்கு இரும்புத்திரை என்ற படத்திற்காக நானும், பட அதிபர் திருப்பூர் சுப்பிரமணியமும் சேர்ந்து கடனாக பணம் கொடுத்தோம். அந்த பணத்தை விஷால் திருப்பி கொடுத்து விட்டார். ஆனால் கடனுக்காக விஷால் கொடுத்திருந்த ஆவணங்களை, திருப்பூர் சுப்பிரமணியம் வைத்திருந்தார். அவர் அந்த ஆவணங்களை தனது நண்பரும் சினிமா இயக்குனருமான சிவகுமாரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

சிவகுமார் திடீரென மரணம் அடைந்து விட்டார். விஷாலுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய ஆவணங்களை சிவகுமார் எங்கு வைத்திருந்தார், என்பதை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி விஷாலிடம் சொல்லி, வக்கீல் மூலம் ஆவணங்கள் காணாமல் போனது பற்றியும், விஷால் கடனை திருப்பி கொடுத்து விட்டார் என்றும், எதிர்காலத்தில் இது தொடர்பாக எந்த பிரச்சினையும் கொடுக்க மாட்டோம் என்றும் பத்திரமாக எழுதி கொடுத்து விட்டோம்.

இந்தநிலையில் விஷால் ஏன் போலீசுக்கு போனார் என்று தெரியவில்லை. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆவணங்களை தொடர்ந்து தேடச்சொல்லி இருக்கிறேன். ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில், அவற்றை பத்திரமாக விஷாலிடம் கொடுத்து விடுவோம். இதுதான் உண்மை. இதில் ஒரு பிரச்னையும் இல்லை. இப்போது வெளி ஊரில் இருக்கிறேன். சென்னை வந்ததும் இது தொடர்பாக பேசி பிரச்னைகளை சரிசெய்து விடலாம்’’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.