“தமிழ்நாட்டில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்” : நடிகை ரோஜா புகழாரம்!

0
63

“தமிழ்நாட்டில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்” : நடிகை ரோஜா புகழாரம்!

சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் எழும்பூர் தி.மு.க இளைஞர் அணி சார்பில் சென்னை புரசைவாக்கம் தானே தெருவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி புகழ் அரங்கம் நிகழ்வு நடைபெற்றது

இதில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, இயக்குனர் சுசி கணேசன்,நகைச்சுவை நடிகர்கள் பாஸ்கர், மயில்சாமி ,திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே செல்வமணி, நடிகையும் ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினருமான நடிகை ரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பேசிய நடிகை ரோஜா, “எனக்கு தாய்வீடு ஆந்திரா என்றால், தமிழ்நாடு மாமியார் வீடு. இங்குள்ள மக்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கு நான் வந்தது இரண்டு நபர்களுக்காக ஒன்று முதலமைச்சர் முகஸ்டாலின் மற்றொன்று அமைச்சர் சேகர்பாபு.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அண்ணன் தம்பி உறவாக மேடையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்கரித்தார். தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் என்ன தேவை என்பது அறிந்து மின்னல் போல் செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் நல்ல திட்டங்களால், நிச்சயம் இன்னும் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மட்டுமே திகழ்வார்.

அறநிலையத்துறைக்கு அமைச்சராக சேகர்பாபு பதவியேற்ற பிறகுதான் அந்த துறையின் பவர் என்ன என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு சிறப்பாக அமைச்சர் சேகர்பாபு செயல்பட்டு வருகிறார். மேலும் அரசுக்கு நிதி கொடுக்கும் துறையாக அறநிலையத்துறையைச் செயல்படுத்தி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.