கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட திரையரங்குகள் : 85% வளர்ச்சி அடைந்து உச்சத்தை தொட்ட ஓடிடி நிறுவனங்கள்!

0
8

கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட திரையரங்குகள் : 85% வளர்ச்சி அடைந்து உச்சத்தை தொட்ட ஓடிடி நிறுவனங்கள்!

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா கடந்தாண்டு பரவத் தொடங்கிய போது, உலகின் எல்லா நாடுகளிலும் திரை அரங்குகள் மூடப்பட்டன. இதனால், மக்களின் பார்வை ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பின. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் வேறு வழியின்றி திரைத்துறையினரும் ஓடிடி நிறுவனங்களை நாடத் தொடங்கினர். அதன் காரணமாகவே, சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களே ஓடிடியில் வெளியாகும் நிலை ஏற்பட்டது.

இதனால், இந்தியாவில் 2018-ம் ஆண்டில் 1370 கோடி ரூபாயும், 2019-ம் ஆண்டில் 1910 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டி 39 விழுக்காடு வளர்ச்சியில் இயங்கிய ஓடிடி நிறுவனங்கள் 2020-ம் ஆண்டில் மட்டும் 7220 கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளன. அதோடு, ஓடிடி நிறுவனங்களின் வளர்ச்சி 85 விழுக்காடாக உயர்ந்து பெரும் உச்சத்தையும் தொட்டிருக்கிறது. அந்தவகையில், கடந்தாண்டில் மட்டுமே நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளர்களை பெற்றதாக அறிவித்தது. இதைப் போலவே, அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் டிஸ்னி ப்ளஸ், Zee 5 போன்ற தளங்களும் பெருமளவில் பயனாளர்களை ஈர்த்திருக்கின்றன.

ஓடிடி தளங்களில் ரசிகர்கள் படம் பார்க்கத் தொடங்கினாலும், ’மாஸ்டர்’, ’கர்ணன்’ போன்ற படங்கள் வெளியானபோது திரையரங்குகளுக்கு வருவதில் ஆர்வம் காட்டத் தவறவில்லை. அதேநேரம், இணையத் தொடர்கள், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியீடு என தங்கள் பயனாளர்களை தக்க வைக்க ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. அந்தவகையில், சல்மான் கானின் ’ராதே’, தனுஷ் நடித்துள்ள ’ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதனால், கொரோனா கட்டுக்குள் வந்து திரையரங்குகள் முழுமையாக திறக்கப்பட்டால், ஓடிடி தளங்களை தொடர்ந்து பயன்படுத்துவார்களா? பழையபடி திரையரங்கில் படம் பார்க்கவே விரும்புவார்களா என்பது தெரியவரும்.