இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திடீர் உடல்நல குறைவால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

0
19

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திடீர் உடல்நல குறைவால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தேசிய விருது பெற்ற ‘இயற்கை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டவர் எஸ்.பி.ஜனநாதன். ‘ஈ’, ‘பேராண்மை’ படங்கள் மூலம் தன்னை தனித்துவமான இயக்குநராக நிறுவியர். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ திரைப்படம் தயாராகிவந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் வியாழக்கிழமை மதியம் வரை எடிட்டிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். பின்னர், வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார். வீட்டுக்கு வந்தவர் மீண்டும் எடிட்டிங் பணிக்காக திரும்பவில்லை என்றதும், பிற்பகல் 3.30 மணியளவில் அவரை அழைக்க அவரது உதவியாளர் ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது, வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, எஸ்.பி.ஜனநாதன் பேச்சு மூச்சின்றி தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியுற்றுள்ளார்.

உடனடியாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டார். உடனடியாக வெண்டிலேட்டர் உதவியுடன் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. மூளையில் பிரச்னை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.”

அவரது உடல்நிலை குறித்து மருத்துவரிடம் விசாரித்தபோது, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தீவிர சிசிக்கை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அமீர் மற்றும் திரையுலக பிரபலங்கள் அப்போலோ விரைந்தனர். இரவில் அவரை பார்க்க விஜய்சேதுபதிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

திடீரென்று நேர்ந்துவிட்ட இந்த சம்பவம் குறித்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

எஸ்.பி. ஜனநாதன் நலம் பெற்று மீண்டு வர அனைவரும் வேண்டுவோம்.