‘மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறேன்…’ – அநாகரிகமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!

0
346

‘மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறேன்…’ – அநாகரிகமாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார் இயக்குநர் மிஷ்கின்!

‘பாட்டல் ராதா’ புரொமோஷன் விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா. ரஞ்சித் முதலிய இயக்குநர்கள் கூடிய விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேச்சில் அடிக்கடி அநாகரிகமான வார்த்தைகள் பிரயோகித்ததும் இளையராஜா முதலான சிறந்த இசையமைப்பாளர்களை ஒருமையில் பேசியது, பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. திரையுலகினர் பலரும் மிஷ்கின்னுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தார்கள். இந்நிலையில், இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான பேட் கேர்ள் (Bad Girl ) திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோருடன் மிஷ்கின்னும், இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், ‘பேட் கேர்ள்’ பற்றி பேசிவிட்டு, கவிஞர், எழுத்தாளர், பாடலாசியர், சிறந்தப் பெண்மணி தாமரையிடமும், தத்துவரீதியாக என்னை விமர்சித்த லெனின் பாரதியிடமும், நடிகர் அருள் தாஸ், சசி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, என் மீது செருப்பை எறிய வேண்டும் எனப் பேசிய நண்பர், என்னால் பாதிக்கப்பட்ட அமீர், வெற்றிமாறன் என அனைவரிடமும் மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்துக்கொள்கிறேன்.

“முதல் ஆளாக பாடலாசிரியர் தாமரையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவர் என்னைப் பற்றிய விமர்சனத்தில் வெற்றி பெற்றுவிட்டதால் இப்படி பேசுகிறேன் என்று கூறியிருந்தார். வெற்றி என் மீது தலை மீதிருந்தால் பெரிய ஆட்களுடன் படம் செய்திருக்க வேண்டும். அதனால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

பின் இயக்குநர் லெனின் பாரதி விமர்சித்திருந்தார். தத்துவ ரீதியாக விமர்சித்திருந்தார். அவரிடமும் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். என்னை திட்டி நடிகர் அருள்தாஸ் பிரபலமாகவே ஆகிவிட்டார். அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தயாரிப்பாளர் எஸ்.தாணுவிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன்.

என் மீது செருப்பை எறிய வேண்டும் என்று கூறிய நண்பரிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். அன்று மேடையில் இருந்த வெற்றிமாறன் மற்றும் அமீர் இருவரும் சிரித்தார்கள் என்று பலரும் திட்டினார்கள். ஜோக்காக பேசியது, இரண்டு மூன்று வார்த்தை மேலே போய்விட்டது அவ்வளவே. மனதில் இருந்து பேசியதால் அப்படி ஆகிவிட்டது என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு நகைச்சுவைக் கூறப்படுகிறதென்றால், அதைக் கேட்பவர்கள் ஆழ்மனதிலிருந்துதான் சிரிப்பார்கள். அவர்கள் அந்த வார்த்தைகளைக் கவனிப்பதில்லை. அன்று அந்த மேடையில் அதுதான் நடந்தது. நகைச்சுவை என்று வரும்போது ஒருசில வார்த்தைகள் அப்படி வந்துவிட்டது. அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். ஆனால், ஒன்றை தெளிவுப்படுத்த வேண்டும். என்னுடைய நகைச்சுவை என்பது வெறும் நகைச்சுவைதான். அதில் யாரையும் தனிப்பட்டமுறையில் விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

என் நேசத்துக்குறிய நடிகர் விஷாலுக்கும் எனக்கும் சண்டை நடந்தபோது, அன்று நான் கோபத்தில் இருந்தேன். அப்போதுகூட பொறுக்கி என்ற வார்த்தைதான் பயன்படுத்தினேனே தவிர வேறு மோசமான, வசை வார்த்தைகளைப் பேசவில்லை. மேடை நாகரீகம் வேண்டும் என்கிறார்கள். இது கூத்துக் கலைஞர்களின் மேடை. கிராமங்களில் இன்றும் இரவு மேடை நாடகங்களில் கேட்போர் வெட்கும் அளவிற்கான வார்த்தைகள் பேசுவார்கள். என் மனதுக்கு நெருக்கமானப் படம் வெற்றியடைய வேண்டும் என்ற ஆசையில், மக்களின் கவனத்தை ஈர்க்க பேசிய நகைச்சுவை அது.

ஒரு படத்தின் மேடையில் அதைப் பற்றி பேசும் போது, என் மனதில் ஆழத்தில் இருந்து தான் பேசுவேன். திருக்குறளில் காமத்துப் பால் இல்லையா, சங்க இலக்கியத்தில் எத்தனைமுறை அல்குல் என வந்திருக்கிறது என்று பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஒரு படம் வந்தது. அதைப் பற்றி யாரேனும் விமர்சனம் செய்தார்களா? அப்போது நீங்கள் அமைதியாகதானே இருந்தீர்கள்? கடந்த 3 நாள்களாக 500 பேர் போனில் அழைத்தார்கள். பெண்கள் அழைத்து பத்திரமாக இருங்கள் என்றார்கள். என்னப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் என் படத்தைப் பாருங்கள். அதில் என்னை புரிந்துக்கொள்ள முடியும். என் படங்கள் சமூக கருத்துகள் சொல்லவில்லையா? அதில் பேரன்பு இல்லையா?. கமல் சாரிடம் போய்விட்டு திரும்ப வந்துவிட்டேன். ரஜினி சாரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. நான் செல்லவில்லை. நான் நினைத்தால் எப்படியோ வென்றிருக்கலாம்.

பிசாசு 2-வில், என் தாய் நடிகை ஆண்டிரியாவின் நிர்வணக் காட்சி ஒன்று தேவைப்பட்டது. அதை எடுப்பதற்காக பெண் போட்டோ கிராபர் உட்பட, எல்லா ஏற்பாடுகளையும், செய்தேன். ஆனால், நான் பார்க்கும் இலக்கியக் கண்கொண்டு எல்லோரும் பார்க்கமாட்டார்கள். அவரின் நிர்வாணத்தை காண்பித்து நான் பெயர் வாங்கிவிடலாம். ஆனால் அந்தக் காட்சியே வேண்டாம் என முடிவு செய்தேன். 2 வருடமாக அந்தப் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

நான் சினிமாவை நேசிப்பவன். இதைத் தவிர எனக்கு வேறு வேலைகளே இல்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. அதற்கு மறுநாள்தான் வெளியானது. ஆனால், அந்தப் படத்தின் உரிமம் வாங்குவதற்கு ஒரு சேனல் என்னை அணுகியது. என் நெருக்கமான நண்பர் என்னை அங்கு அழைத்துச் சென்றார். 20 பேர் தடியர்கள் இருக்கும் அறையில் என்னை அடைத்துவைத்து, 70 லட்சத்துக்கு மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள். அவர்கள் கண்முன்னே அந்த செக்கை கிழித்துப்போட்டு, நான் சென்னை வந்தபோது வெள்ளைப் பேப்பரும், பென்சிலுடன் வந்தேன். இதிலிருந்து மீண்டு வருவேன் எனக் கூறிவிட்டுவந்தேன். ஒவ்வொருமுறையும் துரோகத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கிறேன். மனிதர்களையும், பிராணிகளையும் நேசிப்பவன் நான்.  அதனால் மன்னிப்புக்கேட்க எப்போதும் தயங்கியதில்லை.  உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு, உங்களை கடவுள் ஆக்குகிறேன்”.  இவ்வாறு மிஷ்கின் பேசினார்.