பொம்மை சினிமா விமர்சனம் : பொம்மை சுவாரஸ்யம் குறைவு | ரேட்டிங்: 2/5
ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மக்கள் தொடர்பு AIM.
துணிக்கடை பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஓவியராக பணிபுரிகிறார் ராஜு (எஸ்.ஜே.சூர்யா). இவருக்கு சிறு வயது முதலே மனநலப் பிரச்னை உள்ளது. அதற்கான மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கும் அவர் தற்போது ஏதோ விரக்தியில் மருந்து எடுப்பதை நிறுத்தி விடுகிறார். அப்படியிருக்கையில் ஒரு நாள், அவர் கன்னம் பகுதியில் குறைபாடுள்ள பொம்மை ஒன்றை ஓவியம் தீட்ட முனைகிறார். அது சிறு வயதில் காணாமல் போன அவருடைய உயர்நிலைப் பள்ளி காதலி நந்தினியை (ப்ரியா பவானி சங்கர்) நினைவுபடுத்தி, அவர் கண்முன் நிறுத்துகிறது. அந்த பொம்மையுடைய மாயத்தோற்றம் அவனை தினமும் நந்தினியாக பாவித்து பார்க்கவும் அதனுடன் உரையாடவும் செய்கிறது. கற்பனை காதலி (ராஜு பார்வையிலே) உயிரோடு வருகிறார், அவர்கள் ஒன்றாக வாழ விரும்பும் வாழ்க்கையை கற்பனை செய்கிறார்கள். அதனுடன் சேர்த்து, ராஜு தனது மருந்து சாப்பிடுவதை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார். அது அவரை மேலும் ஆக்ரோஷமாக ஆக்குகிறது, தன் காதலுக்காக கொலை காரனாகவும் அவரை மாற்றுகிறது. கொலைகாரனாக ஏன் மாறுகிறார்? அந்த மாயத்தோற்றம் அவனுடைய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

எஸ்.ஜே. சூர்யா முக்கிய ஹீரோக்களுடன் வில்லனாக நடிக்கும் போது அவர் மட்டும் தான் தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனி சிறப்பு பெற்றிருந்தார். அந்த பெயரை காப்பாற்ற அவர் இனி தான் வில்லன் கதாபாத்திரங்கள் மட்டுமே நடிப்பேன் என்று கூறியதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. வில்லனாக நடிக்க தன் சம்பளத்தையும் அதிகபடியாக உயர்த்தினார். அவருடைய தொழில் நன்றாக தானே போய்க் கொண்டிருந்தது. பின் ஏன் அவர் ஹீரோவாக நினைத்து பொம்மை கதையை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் வெறுக்கும் அளவுக்கு இஷ்டத்துக்கு நடித்து தள்ளி அனைவரின் பொறுமையை சோதித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதே நேரத்தில், க்ளைமாக்ஸில் மட்டும் அழுத்தமான உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா என்பதை குறிப்பிட வேண்டும்.
பொம்மையாக அழுத்தமான கதாபாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர் கதையின் உயிர்நாடியாக பயணித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
சாந்தினி தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும், ரிச்சர்ட் எம்.நாதன் காட்சியமைப்புகளும் சிறப்பாக உள்ளது.
ராதா மோகன் திரைக்கதையில் மற்றும் காட்சி அமைத்தல் ஆகியவற்றில் கொஞ்சம் உழைத்திருந்தால் படம் பேசப்பட்டிருக்கும்.
மொத்தத்தில் ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரித்துள்ள பொம்மை சுவாரஸ்யம் குறைவு.