சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல்; நீதிக்கான கூட்டணி அமோக வெற்றி!
கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கடைசியாக 1999ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக, தேர்தல் நடத்த வேண்டும் என்று மறைந்த எம்.யூ.ஜே மோகன் உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் கண்காணிப்பில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பின் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு டிச.15ம் தேதி தேர்தல் நடைபெறும் என நீதிபதி பாரதிதாசன் கடந்த நவ.28ம் தேதி அறிவித்தார். இதில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச்செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய 6 நிர்வாகிகளும், 5 நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30ம் தேதி முதல் டிச.7ம் தேதி வரை நடந்தது. வேட்பு மனுக்கள் டிச.9ம் தேதி பரிசீலிக்கப்பட்டது. டிச.10ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணிஇ ஒற்றுமை அணிஇ மாற்றத்திற்கான அணி மற்றும் சுயேச்சையாகவும் 44 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில்இ சென்னை பிரஸ் கிளப்பில் நேற்று தேர்தல் விறுவிறுப்புடன் நடந்தது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில் மொத்தம் 1502 வாக்குகளில் 1371 வாக்குகள் பதிவானது. இது 91.27 சதவீதமாகும். மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் நீதிக்கான கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நீதிக்கான கூட்டணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் (தினகரன்), பொதுச்செயலாளராக அசீப் முகமது (அரண் செய்), பொருளாராக மணிகண்டன் (ஜெயா டிவி), துணை தலைவர்களாக மதன் (நியூஸ் 18 தமிழ்நாடு) மற்றும் சுந்தரபாரதி (புதிய தலைமுறை), இணை செயலாளராக நெல்சன் சேவியர் (ஒன் இந்தியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். நிர்வாக குழு உறுப்பினர்களாக நீதிக்கான கூட்டணியை சேர்ந்த ஸ்டாலின் (புதிய தலைமுறை), அகிலா ஈஸ்வரன் (தி இந்து), பழனிவேல் (பாலிமர் டிவி), விஜயகோபால் (ஏஎன்ஐ) மற்றும் ஒற்றுமை அணியை சேர்ந்த கவாஸ்கர் (தீக்கதிர்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தலைவர் சுரேஷ் வேதநாயகம் அவர்களுக்கு மூத்த பத்திரிகையாளர் மீரான் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார். சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற தலைவர், நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒன்றினைந்து வரும் காலங்களில் நமது மன்றம் மூலம் பல அரிய பணிகளை தன்னலம் கருதாமல் முன்னெடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு பத்திரிகையாளர்களுக்கு அறிவித்த பத்திரிகையாளர் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து நல உதவிகளை ஓய்வுபெற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பெற்று தருவார்கள் என நம்புகிறோம்.