சர்ச்சையாக வேண்டும் என்று திட்டமிட்டே ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது! எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் சரமாரி கேள்வி!!

0
366

சர்ச்சையாக வேண்டும் என்று திட்டமிட்டே ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது! எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் சரமாரி கேள்வி!!

அஞ்சலி சிவராமன் நடித்த தமிழ் திரைப்படம் ‘பேட் கேர்ள்’ தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.  இயக்குநர் வெற்றி மாறன் படங்கள் இயக்குவது மட்டும் இல்லாமல், படங்களை தயாரிக்கவும் செய்கின்றார். இவரது, கிராஸ் ரூட்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம், தயாரித்துள்ள படம் பேட் கேர்ள். இந்தப் படத்தினை இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய, வர்ஷா பரத் இயக்கியுள்ளார். படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், ‘பேட் கேர்ள்’ டீசர் வெளியானதிலிருந்து, பிராமண சமூகத்தை எதிர்மறையாக சித்தரித்ததாக குற்றச்சாட்டுகளுடன் சர்ச்சையைத் தூண்டியுள்ளது.

‘பிராமணர் சமூகத்தை’ மோசமான முறையில் சித்தரித்ததற்காக பேட் கேர்ள் படத்தின் தயாரிப்பாளர்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஒரு பிராமணப் பெண்ணை எதிர்மறையாக சித்தரித்ததற்காக படத்தின் டீசர் நெட்டிசன்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இயக்குனர் மோகன் ஜி., தவிர, பல இணையவாசிகள் பிராமண சமூகத்தை சாதகமற்ற முறையில் சித்தரித்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர்களை விமர்சித்தனர்.

தற்போது ‘பேட் கேர்ள்’ டீசரை பார்த்துவிட்டு எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

ஒரு பள்ளி மாணவிதான் கதாநாயகி. அவள் பார்வையில் அல்லது அனுபவத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டப்பட்டதை எல்லாம் செய்யும் சுதந்திரமே சந்தோஷம் தருவது.
அப்படி சுதந்திரமாக தன் சந்தோஷத்திற்காக அவள் செய்ய விரும்பும் காரியங்கள் தன் உடலைக் கெடுக்கும் மது, சிகரெட், பலருடன் உடலுறவு, கெட்ட வார்த்தை பேசுவது போன்றவை.
அவள் பார்வையில் மாரல்ஸ், வேல்யூஸ், எத்திக்ஸ் என்று எதை சமூகம் சொன்னாலும், குடும்பம் சொன்னாலும் அதெல்லாம் பெண்ணை அடிமைப்படுத்தும் விஷயங்கள்!
இப்படியான பெண்கள் இந்தச் சமூகத்தில் இல்லையா? இருக்கிறார்கள்தான். எத்தனை சதவிகிதம்? அந்த புறக்கணிக்கப்பட வேண்டிய கூட்டத்தில் ஒரு பெண்ணைக் கதாநாயகியாக்கி சமூகத்தில் உருவாக்க நினைக்கும் புதிய கருத்தியல்தான் என்ன?
இப்படியான சிந்தனைகளுடன் இருக்கும் ஒரு பெண் எந்தச் சமூகத்திலும் இருக்க முடியுமே.
குறிப்பிட்டு பிராமின்ஸ் குடும்பப் பின்னணி என்று காட்ட வேண்டிய அவசியம் என்ன?
இதன் இயக்குநர் ஒரு பெண். அவரின் மேடைப் பேச்சில் அத்தனை சிந்தனைக் குழப்பங்கள்.
நான் காட்டியுள்ள பெண்ணை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள அவசியமில்லை.
பெண்கள் புனிதர்களாக இருக்க அவசியமில்லை. மனிதர்களாக இருந்தால் போதும்.
ஒரு பெண் என்பவள் பத்தினியாக இருக்க வேண்டும், தாய்மை என்றால் போற்றத்தக்கது போன்ற சமூகம் உருவாக்கியுள்ள கருத்துக்கள் பெண்களுக்கு பிரெஷராக இருக்கிறது.
நான் இந்தப் படத்தை எடுத்தபோதும், எடிட் செய்தபோதுமே என் சிந்தனைக் கோணங்கள் மாறிக்கொண்டே இருந்தன. நான் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருப்பவள்.
இதெல்லாம்தான் ஃபெமினிசத்தின் டிக்‌ஷனரி என்று சொல்லவில்லை.
ஆன்களில் குறைபாடுள்ள கதாப்பாத்திரங்களை நிஜத்திலும், திரையிலும் நிறைய பார்த்திருக்கிறேன். இந்தக் கதாநாயகியும் குறைபாடுள்ளவள்தான். ஆனால் பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அந்தப் புதிய இயக்குநருக்குதான் தன் சிந்தனையில் குழப்பங்கள் இருக்கின்றன. தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்குமா?
ஒரு படத்தைப் பார்த்துவிட்டு டேக் ஹோம் மெசேஜாக எதை எடுத்துக்கொள்ள வேண்டும்?
ஓட்டுப் போடவும், திருமணம் செய்யவுமே வயது தகுதி இல்லாத ஒரு குறைபாடுகள் கொண்ட பள்ளி மாணவியின் மூலம் என்ன கருத்தியல் சொல்வது நோக்கம்?
பெண்ணியம் குறித்து தமிழில் நச்சென்று பேசிய அவள் அப்படித்தான், சிறை, மனதில் உறுதி வேண்டும், நேர்கொண்ட பார்வை, இந்தியில் தப்பட் போன்ற படங்களை எல்லாம் இந்தப் புதுமுக இயக்குநர் பார்த்திருக்கிறாரா?
எது பெண்ணியம் என்று விவாதிக்கும், பேசும், வழிகாட்டும் நூற்றுக்கணக்கான தமிழ் படைப்புகளைப் படித்திருக்கிறாரா?
இந்தப் படத்தில் முடிவில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
ஆனால்.. டீஸரின் நோக்கம் சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே.
அமரன், சூரரைப் போற்று போன்ற நிஜ மனிதர்களின் வாழ்க்கைப் படங்களில் கதாநாயகன் ஒரு பிராமின் என்று நேர்மையாகக் காட்டாத தமிழ் சினிமா.. சர்ச்சைக்குரிய படங்களில் பிராமினை அடையாளப்படுத்தும் போக்கை நான் கண்டிக்கிறேன் என்று எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூல் பதிவு
ALSO READ;