தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் தேர்தல் : போட்டியின்றி தலைவர் மற்றும் செயலாளர் தேர்வு!

0
245

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் தேர்தல் : போட்டியின்றி தலைவர் மற்றும் செயலாளர் தேர்வு!

தமிழ்ச் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ என்றழைக்கப்படும் ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனின் 2023-2025-ம் வருடங்களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் தலைவர் பதவிக்கு விஜய முரளியும், செயலாளர் பதவிக்கு ஜானும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மற்றைய பதவிகளுக்குப் போட்டி இருந்ததால் அதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரையிலும் சாலிகிராமம் பிரசாத் 70 எம்.எம். தியேட்டரில் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 82 வாக்காளர்களில், 80 பேர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தார்கள்.

2 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டி பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்பு மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

முதலில் பொருளாளருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட யுவராஜ், 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குமரேசன் 26 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட கோவிந்தராஜ் 45 வாக்குகளையும், வி.கே.சுந்தர் 44 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். எம்.பி.ஆனந்த் 34 வாக்குகளையும், புவன் 28 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.

இணைச் செயலாளர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் கே.எஸ்.கே.செல்வக்குமார் 41 வாக்குகளையும், வெங்கட் 40 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். ஆர்.ராமானுஜம் 25 வாக்குகளையும், என்.தர்மதுரை 23 வாக்குகளையும், என்.கணேஷ்குமார் 23 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டவர்களில், கிளாமர் சத்யா 72 வாக்குகளையும், ஜி.பாலன் 66 வாக்குகளையும், என்.சரவணன் 64 வாக்குகளையும், ஜெ.சுரேஷ்குமார் 62 வாக்குகளையும், மதுரை செல்வம் 61 வாக்குகளையும், வி.பி.மணி 58 வாக்குகளையும், எஸ்.செல்வரகு 56 வாக்குகளையும், வி.எம்.ஆறுமுகம் 53 வாக்குகளையும், முத்துராமலிங்கன் 49 வாக்குகளையும், பெற்று வெற்றி பெற்றுள்ளனர். டி.நித்திஷ் ராம் 48 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சங்கர் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தார்.

பிஆர்ஓ யூனியன் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.